Monday, September 26, 2011

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்



மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர் செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.
சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
உடல் சூடு நீங்க: வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.
சிறுநீர் பெருக: மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது.
சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.
பித்தத்தைக் குறைக்க: உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும், உடலை வலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...


* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

vedio

film